இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கும் இரட்டைச் சுழி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (திங்கள்கிழமை) மாலை நடந்தது. சங்கர் தயாரித்துள்ள இப்படத்தின் பாடல்களை ஐஸ்வர்யா பச்சன் வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேசிய இயக்குநர் பாலசந்தர், என்னையும் பாரதிராஜாவையும் நடிக்க வைத்தது பெரிய சிரமம் இருந்தது என்று இங்கு பேசினார்கள். ஆனால் அது அப்படி அல்ல. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. சங்கர் தயாரிப்பில் நான் நடித்தது பெரிய மகிழ்ச்சி.
இங்கு ஐஸ்வர்யா பச்சன் வந்திருக்கிறார். எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்னவென்றால் ஐஸ்வர்யா ராய் அருகில் என்னை அமரவைத்ததுதான். இந்த வயதிலும் இந்த கிழவனுக்கு இப்படி ஒரு ஆசையா என்று நீங்கள் கேட்கலாம். அழகை ஆராதிக்க வயது வேண்டுமா. யார் வேண்டுமானும் எந்த வயதிலும் அழகை ஆராதிக்கலாம். ஆனால் ஆராதிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பில் ரஜினியும் கமலும் தெரிகிறார்கள் என்று சங்கர் சொன்னார். ஆனால் அது அப்படியல்ல. நான் ரஜினியையும், கமலையும் காப்பியடிக்கவில்லை. அவர்கள்தான் என்னை காப்பியடிக்கிறார்கள் என்றார்.




Posted in 




